Saturday 28 January 2017

கலப்பினப் பால்... நாட்டுப்பசும்பால்... எது நல்லது?

கலப்பினப் பால்... நாட்டுப்பசும்பால்... எது நல்லது?



பால் மனிதனின் முதல் உணவு. குழந்தையாய் கண் விழித்தது முதலே பாலுக்கும் மனிதனுக்குமான பந்தம் தொடங்கிவிடுகிறது. தாய்ப்பால் இல்லாத குழந்தைகளையும் அமுதூட்டி காக்கும் அரும்உணவு பால்தான். இந்தியர்கள் பாலுக்கும் பால் பொருட்களுக்கும் உணவில் தரும் முக்கியத்துவம் பெரிது. அதனால், உலகின் மிகப்பெரிய பால் சந்தையாக நம் தேசம் இருக்கிறது. இதுதான் பால் முதல் ஜல்லிக்கட்டு வரை சகலத்திலும் செயல்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... ஜெர்ஸி பால் தேவை இல்லை என்றும் நாட்டுமாட்டின் பாலே சத்தானது என்றும் ஒரு சாரார் பேசி வருகிறார்கள்... நாட்டுமாட்டின் பால் ஏன் சிறந்தது? அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது குறித்து விரிவாகப் பேசுகிறார் கால்நடை மருத்துவர் காசி பிச்சை. பசும் பால் கிடைக்காதவர்கள், இதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம்.
நாட்டுப்பசும்பால்
பாலில் புரதச்சத்து அதிகம். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்புச்சத்து,ஒற்றை நிறைவுறா கொழுப்புச்சத்து, பன்மைநிறைவுறா கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, ஏ2 காஸின் புரதம் (A2 Casein Protein) நாட்டு மாடுகளின் பாலில் மட்டுமே உள்ளது. இது, உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளைக் கொடுத்து உடலை வலுவாக்குகிறது.
கலப்பினப் பசுவின் பால்
மேலை நாட்டு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் ஏ1 காஸின் புரதம் உள்ளது. மேலும், இதில் ட்ரியான் (Trion) என்ற வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் உடனடியாக உடலைப் பாதிக்காது என்றாலும், நாட்பட்ட அளவில் 20-30 வருடங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
தொடர்ந்து கலப்பினப் பசுவின் பாலைப் பருகிவரும்போது, அல்சைமர், ஆண்மைக்குறைவு, விரைவில் விந்து வெளிப்படுதல், நரம்புத்தளர்ச்சி மற்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இந்தியாவில், கடந்த 30 வருடங்களாகப் புழங்கிவரும் கலப்பின மாட்டுச் சந்தையால், பவுடர் பால் பெருகியது. பவுடர் பால் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைப் பருகும் காரணத்தால் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகரித்துவருகிறது.
கலப்பின மாடுகளால் தமிழகத்தின் தட்பவெப்பநிலையில் உயிர்வாழ முடியாது. நன்கு குளிரூட்டப்பட்ட அறையில்தான் இவற்றால் இருக்க முடியும். முற்றிலும் வணிக நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டவை இவை. அதிகமான பால் தர வேண்டும் என்பதற்காகவே, கலப்பின மாடுகளுக்குப் பல்வேறு ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. இந்த ஊசிகளில் உள்ள ரசாயனம், மாட்டில் ரத்தம், பால் ஆகியவற்றில் கலக்கும். இவற்றைப் பல வருடங்களுக்குத் தொடர்ந்து பருகினால் சர்க்கரைநோய், புற்றுநோயில் இருந்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாட்டுமாடுகள் ஏன் சிறந்தவை?
தாமிரபரணி ஆற்றின் அருகே வளரும் மாடுகள் தாமிரம் அதிகம் உள்ள நீரைப் பருகி வளர்பவை. அந்த நீரில் விளையும் புற்களைச் சாப்பிடுவதால் அவற்றின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். சில மாடுகள் மக்னீசியம் அதிகம் உள்ள ஆற்று நீரைப் பருகி வளர்வதால், உயரம் குறைவாக இருக்கும். இப்படி வளரும் இடத்துக்குத் தகுந்தாற்போல் மாட்டின் உடல் தன்மை, அவை சுரக்கும் பாலின் மூலக்கூறுகள் மாறுபடும். தமிழக மக்கள், தாங்கள் வாழும் பகுதியில் வளரும் நாட்டுமாடுகள் மூலமாகக் கிடைக்கும் பாலையே குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது. மேலை நாட்டு மாடுகளின் பால், நம் நாட்டவர் உடலுக்கு இயல்பாகவே ஒப்புக்கொள்ளாது.
ஒரு லிட்டர் நாட்டு மாட்டுப் பாலில் 30 மி.லி, தூக்கம் வரவழைக்கும் ரசாயனம் உள்ளது. இது சராசரியான அளவு. இதுவே, கலப்பின மாடு சுரக்கும் பாலில் 50 மி.லி-யாக உள்ளது. இதனால், இதனைப் பருகும் கைக்குழந்தைகள் அதிகமாகக் தூங்குபவர்களாகவும் மந்தத்தன்மைகொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பசும்பால் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
நாம் குடிக்கிற டீயில் பாலைத் தவிர்த்துவிட்டு பிளாக் டீ சாப்பிடலாம். அதில் புதினாவைப் போட்டு புதினா டீயாக அருந்தலாம். சுக்கு மல்லி, இஞ்சி டீ என பால் இல்லாத டீ வகைகளைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பாலுக்குப் பதிலாக என்ன கொடுப்பது?
குழந்தைகளுக்கு பல் முளைக்கத் தொடங்கியதுமே பாலை நிறுத்திவிட வேண்டும். `பாலில் கால்சியம் இருக்கிறது, பால் சாப்பிட்டால்தான் கால்சியம் கிடைக்கும்’ என்பதே தவறான புரிதல். உடலுக்கு என்ன சத்து தேவையோ, அதனை நாம் சாதாரணமாகச் சாப்பிடுகிற உணவுகளில் இருந்தே உடல் தயாரித்துக்கொள்கிறது. இயற்கையான கீரைகள், காய்கறிகள் இவற்றைச் சாப்பிட்டாலே போதும்... உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்துவிடும். தாய்ப்பாலையும் குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் நிறுத்திவிட வேண்டும். உடலின் பால் தேவை அவ்வளவுதான். பல் முளைக்கிறது என்றால் திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். பசும்பாலை கொடுத்துப் பழக்காமல் பழச்சாறுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நல்ல மாற்று உணவு. தாய்ப்பாலுக்கு நிகரான ஆற்றல் தேங்காய்ப்பாலில் இருக்கிறது.
- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

No comments:

Post a Comment