Saturday 28 January 2017

நாட்டு நாய்கள்


நாட்டு நாய்கள்



“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:
“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.
தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.
கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக்கொள்ளும்.
பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன. ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெருநாய்களாக்கிவிட்டோம்.
நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.
ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.
வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.
இப்போது தெருநாய்களாக்கப்பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.
இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.
கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள். எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.
பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.
நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.
தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.
ஏன்என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.
எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்.

கலப்பினப் பால்... நாட்டுப்பசும்பால்... எது நல்லது?

கலப்பினப் பால்... நாட்டுப்பசும்பால்... எது நல்லது?



பால் மனிதனின் முதல் உணவு. குழந்தையாய் கண் விழித்தது முதலே பாலுக்கும் மனிதனுக்குமான பந்தம் தொடங்கிவிடுகிறது. தாய்ப்பால் இல்லாத குழந்தைகளையும் அமுதூட்டி காக்கும் அரும்உணவு பால்தான். இந்தியர்கள் பாலுக்கும் பால் பொருட்களுக்கும் உணவில் தரும் முக்கியத்துவம் பெரிது. அதனால், உலகின் மிகப்பெரிய பால் சந்தையாக நம் தேசம் இருக்கிறது. இதுதான் பால் முதல் ஜல்லிக்கட்டு வரை சகலத்திலும் செயல்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... ஜெர்ஸி பால் தேவை இல்லை என்றும் நாட்டுமாட்டின் பாலே சத்தானது என்றும் ஒரு சாரார் பேசி வருகிறார்கள்... நாட்டுமாட்டின் பால் ஏன் சிறந்தது? அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது குறித்து விரிவாகப் பேசுகிறார் கால்நடை மருத்துவர் காசி பிச்சை. பசும் பால் கிடைக்காதவர்கள், இதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம்.
நாட்டுப்பசும்பால்
பாலில் புரதச்சத்து அதிகம். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்புச்சத்து,ஒற்றை நிறைவுறா கொழுப்புச்சத்து, பன்மைநிறைவுறா கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, ஏ2 காஸின் புரதம் (A2 Casein Protein) நாட்டு மாடுகளின் பாலில் மட்டுமே உள்ளது. இது, உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளைக் கொடுத்து உடலை வலுவாக்குகிறது.
கலப்பினப் பசுவின் பால்
மேலை நாட்டு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் ஏ1 காஸின் புரதம் உள்ளது. மேலும், இதில் ட்ரியான் (Trion) என்ற வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் உடனடியாக உடலைப் பாதிக்காது என்றாலும், நாட்பட்ட அளவில் 20-30 வருடங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
தொடர்ந்து கலப்பினப் பசுவின் பாலைப் பருகிவரும்போது, அல்சைமர், ஆண்மைக்குறைவு, விரைவில் விந்து வெளிப்படுதல், நரம்புத்தளர்ச்சி மற்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இந்தியாவில், கடந்த 30 வருடங்களாகப் புழங்கிவரும் கலப்பின மாட்டுச் சந்தையால், பவுடர் பால் பெருகியது. பவுடர் பால் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைப் பருகும் காரணத்தால் சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகரித்துவருகிறது.
கலப்பின மாடுகளால் தமிழகத்தின் தட்பவெப்பநிலையில் உயிர்வாழ முடியாது. நன்கு குளிரூட்டப்பட்ட அறையில்தான் இவற்றால் இருக்க முடியும். முற்றிலும் வணிக நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டவை இவை. அதிகமான பால் தர வேண்டும் என்பதற்காகவே, கலப்பின மாடுகளுக்குப் பல்வேறு ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. இந்த ஊசிகளில் உள்ள ரசாயனம், மாட்டில் ரத்தம், பால் ஆகியவற்றில் கலக்கும். இவற்றைப் பல வருடங்களுக்குத் தொடர்ந்து பருகினால் சர்க்கரைநோய், புற்றுநோயில் இருந்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாட்டுமாடுகள் ஏன் சிறந்தவை?
தாமிரபரணி ஆற்றின் அருகே வளரும் மாடுகள் தாமிரம் அதிகம் உள்ள நீரைப் பருகி வளர்பவை. அந்த நீரில் விளையும் புற்களைச் சாப்பிடுவதால் அவற்றின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். சில மாடுகள் மக்னீசியம் அதிகம் உள்ள ஆற்று நீரைப் பருகி வளர்வதால், உயரம் குறைவாக இருக்கும். இப்படி வளரும் இடத்துக்குத் தகுந்தாற்போல் மாட்டின் உடல் தன்மை, அவை சுரக்கும் பாலின் மூலக்கூறுகள் மாறுபடும். தமிழக மக்கள், தாங்கள் வாழும் பகுதியில் வளரும் நாட்டுமாடுகள் மூலமாகக் கிடைக்கும் பாலையே குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது. மேலை நாட்டு மாடுகளின் பால், நம் நாட்டவர் உடலுக்கு இயல்பாகவே ஒப்புக்கொள்ளாது.
ஒரு லிட்டர் நாட்டு மாட்டுப் பாலில் 30 மி.லி, தூக்கம் வரவழைக்கும் ரசாயனம் உள்ளது. இது சராசரியான அளவு. இதுவே, கலப்பின மாடு சுரக்கும் பாலில் 50 மி.லி-யாக உள்ளது. இதனால், இதனைப் பருகும் கைக்குழந்தைகள் அதிகமாகக் தூங்குபவர்களாகவும் மந்தத்தன்மைகொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பசும்பால் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
நாம் குடிக்கிற டீயில் பாலைத் தவிர்த்துவிட்டு பிளாக் டீ சாப்பிடலாம். அதில் புதினாவைப் போட்டு புதினா டீயாக அருந்தலாம். சுக்கு மல்லி, இஞ்சி டீ என பால் இல்லாத டீ வகைகளைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பாலுக்குப் பதிலாக என்ன கொடுப்பது?
குழந்தைகளுக்கு பல் முளைக்கத் தொடங்கியதுமே பாலை நிறுத்திவிட வேண்டும். `பாலில் கால்சியம் இருக்கிறது, பால் சாப்பிட்டால்தான் கால்சியம் கிடைக்கும்’ என்பதே தவறான புரிதல். உடலுக்கு என்ன சத்து தேவையோ, அதனை நாம் சாதாரணமாகச் சாப்பிடுகிற உணவுகளில் இருந்தே உடல் தயாரித்துக்கொள்கிறது. இயற்கையான கீரைகள், காய்கறிகள் இவற்றைச் சாப்பிட்டாலே போதும்... உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்துவிடும். தாய்ப்பாலையும் குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் நிறுத்திவிட வேண்டும். உடலின் பால் தேவை அவ்வளவுதான். பல் முளைக்கிறது என்றால் திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். பசும்பாலை கொடுத்துப் பழக்காமல் பழச்சாறுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நல்ல மாற்று உணவு. தாய்ப்பாலுக்கு நிகரான ஆற்றல் தேங்காய்ப்பாலில் இருக்கிறது.
- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

யாளி

யாளி



தமிழர்களின் கற்பனை மிருகமான "யாளி".
இவை தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் இதனை காணலாம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.