Thursday 23 March 2017

அடிக்கடி இருமலா? ஆஸ்துமாவாக இருக்கலாம்! பனிக்கால பயம்

அடிக்கடி இருமலா? ஆஸ்துமாவாக இருக்கலாம்! பனிக்கால பயம்


வெயிலைப் பழித்த பலருக்கும், இப்போது குளிரைக் கண்டு உதறல்! ‘எத்தனை வெயிலை வேணா பொறுத்துக்கலாம். இந்தக் குளிர் படுத்தற பாடு தாங்கலையே’ என்கிற புலம்பல் பரவலாக! குளிர் படுத்தும் பாடுகளில் பிரதானமானது அடிக்கடி தாக்கும் சளி இருமலும், மூச்சுத்திணறலும். திரும்பின பக்கமெல்லாம் தும்மலும் இருமலுமாக குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை குளிரின் பாதிப்புக்கு யாருமே விதிவிலக்கில்லை.

‘ஊதக் காத்து ஏத்துக்கலை, அதான்’ என்றோ, ‘குளிர் குறைஞ்சா தானா சரியாயிடும்’ என்றோ, சுய சமாதானத்துடன், சுய மருத்துவம் பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருப்பவரா நீங்கள்? பனியின் மேல் பழியைப் போடுவதை நிறுத்திவிட்டு, பிரச்னை என்னவாக இருக்கும் என யோசியுங்கள்!

‘‘தொடர்ச்சியான சளி, இருமல் பிரச்னை அலட்சியப்படுத்தக் கூடியதில்லை. அது உடம்புக்குள்ள எங்கயோ மறைஞ்சிருக்கிற ஆஸ்துமா நோயோட வெளிப்பாடா இருக்கலாம். ‘எனக்கு ஆஸ்துமாவெல்லாம் கிடையாது. பனிக்காலத்துல மட்டும் லேசா மூச்சிறைக்கும்’னு சொல்லிக்கிறவங்கதான் இந்த சீசன்ல அதிக கவனத்தோட இருக்கணும். ஏன்னா, ஆஸ்துமாங்கிறது பனிக்காலத்துல மட்டும் வர்ற நோயில்லை. அந்த சீசன்ல தீவிரமாகலாம் அல்லது தன்னோட அறிகுறிகளைக் காட்டலாம்’’ என்கிறார் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் தாமஸ்.
‘‘சுவாசக்குழல்களைப் பாதிக்கிற ஒரு நோயைத்தான் ஆஸ்துமானு சொல்றோம். சுவாசக்குழல்கள்தான் மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துட்டுப் போகும். ஆஸ்துமா உள்ளவங்களோட சுவாசக்குழாய்களோட உட்சுவர் வீங்கி, குறுகியிருக்கும். அதனால சாதாரணமா மூச்சு விட முடியாது. ஆஸ்துமாவுக்கு முக்கிய காரணம், ஒரு வகை ஜீன்.

பெரியவங்களுக்கு வர்ற ஆஸ்துமாவுக்கு சுற்றுச்சூழல்ல உள்ள தூசி, மாசு மாதிரியான விஷயங்கள் காரணமாகலாம். குழந்தைங்களுக்கு வைரஸ் தொற்று காரணமாகலாம். குளிர்காலத்துல இந்த அவதிகள் அதிகமாகக் காரணம், இந்த சீசன்ல உண்டாகிற ஃபங்கல் மற்றும் வைரஸ் இன்ஃபெக்ஷன். நம்மூர்ல குளிர் ஆரம்பிச்சதுமே காற்று வீசறது கம்மியாயிடுது.

தொற்றுக் கிருமிகள் அப்படியே தங்கிடுது. அதனாலதான் குளிர்காலத்துல பாதிப்புகள் அதிகமா இருக்கு. பெரியவங்களுக்கு மூச்சுத்திணறலும், குழந்தைங்களுக்கு நிறைய இருமலும் இருக்கும். சிரப்பை குடிச்சுக் கட்டுப்படுத்திக்கிறவங்க பலர். ஆனா, இதெல்லாம் ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளா இருந்தா, பிற்காலத்துல பாதிப்பு அதிகமாகும். நெஞ்சுப்பகுதிக்கான சிம்பிளான எக்ஸ் ரே மூலமா ஆஸ்துமா இருக்காங்கிறதைத் தெரிஞ்சுக்கலாம். தேவைப்பட்டா ‘ஸ்பைரோமெட்ரி’னு சொல்லக்கூடிய விசேஷ டெஸ்ட் மூலமா நுரையீரலோட மொத்த கண்டிஷனையும் தெரிஞ்சுக்க முடியும்.

ஆஸ்துமா உறுதி செய்யப்பட்டா, கட்டுப்பாட்டுல வைக்கிறதுக்கு இன்னிக்கு நிறைய மருந்துகள் இருக்கு. காற்றுக் குழாய்களை விரிக்கிறதுக்கான ‘பிராங்கோடைலேட்டர்ஸ்’ மருந்துகள் இருக்கு. குழந்தைகளுக்குத் தனியாவும், பெரியவங்களுக்குத் தனியாவும் இன்ஹேலர்கள் இருக்கு.

 எந்த நோய்க்கும் மருந்துகளைத் தவறாம எடுத்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஆஸ்துமா இருக்கிறது தெரிஞ்சாலுமே, அது தீவிரமாகிறப்ப மட்டும் மருந்து எடுத்துக்காம, எல்லா நாளும் எடுத்துக்கிறதுதான் பாதுகாப்பானது. தூசி, மாசு, குளிர் காற்று மாதிரியான எந்த விஷயம் ஏத்துக்கலையோ, அதுலேர்ந்து விலகி இருக்க வேண்டியது முக்கியம்.

 ஐஸ்கிரீம் ஆகாது, கூல்ட்ரிங் கூடாதுங்கிற மாதிரியான எதுவும் விஞ்ஞானரீதியா நிரூபிக்கப்படலை. ஆனாலுமே குளிர்ச்சியா சாப்பிடறதைவிட, சூடா சாப்பிடறது இதமா இருக்கிறதால அப்படியே சாப்பிடறோம். வயிறு முட்ட சாப்பிடறதை தவிர்த்தே ஆகணும்.

 அடிக்கடி வெந்நீர் குடிக்கிறது, சூப் சாப்பிடறதெல்லாம் மனரீதியா ஆறுதல் கொடுக்கிற விஷயங்கள். செய்யறதாலயும் தப்பில்லை. செய்யாம விட்டாலும் பாதகமில்லை’’ என்கிறார் டாக்டர் தாமஸ்.

ஆர்.வைதேகி

No comments:

Post a Comment